Wednesday, April 11, 2012

Tamil New Year Prediction - Mesham to Midhunam

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) தாராள பணவரவு 70/100
 
ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேஷராசி அன்பர்களே!

நந்தன புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் முழுவதும் ராசிக்கு இரண்டில் அமர்ந்து நற்பலன்களை வழங்குகிறார். சனிபகவான் தன் பங்கிற்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பான பலன் தரும் வகையில் உள்ளார். எண்ணத்திலும் செயலிலும் விவேகம் கலந்திருக்கும். தம்பி, தங்கைகள் உங்களின் உதவியை நாடி வருவர். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பைப் பின்பற்றுவது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு உண்டாகும். புத்திரர் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பர். கல்வி, வேலைவாய்ப்பில்முன்னேற்றம்காண்பர். குலதெய்வ அருள் துணை நின்று உதவும். பூர்வ சொத்தில் எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். வருட முற்பகுதியில் எதிரி பயந்து விலகுவதும் வருட பிற்பகுதியில் அவர்களின் செயலை சமயோசிதமாக முறியடிப்பதுமான நிலை இருக்கும். உடல்நலக்குறைவு நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். கடன் தொல்லை சரியாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்கச் செய்வர். செப்டம்பர் முதல் மார்ச் வரை அவ்வப்போது குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு உருவாகும். அதன்மூலம் தாராள லாபமும், புகழும் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள்: தொழிலில் புதிய வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். லாபம் பன்மடங்கு அதிகரிப்பதால் சேமிக்க இடமுண்டு. சமூகசேவையில் ஆர்வமுடன் ஈடுபடுவர். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தங்களில் அக்கறை உண்டாகும்.

வியாபாரிகள்: மூலதனத்தை அதிகரித்து விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் முன்பை விட கூடும். சரக்கு இருப்பு வைக்க கூடுதல் இடங்களை ஏற்பாடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவர்.

பணியாளர்கள்: பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பணியிலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் படிப்படியாகக் கிடைக்கும். சம்பள உயர்வு திருப்திகரமாக அமையும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் புதிய நுட்பங்களை பயன்படுத்தி பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு, சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் விருப்பமறிந்து செயல்படுவது நல்லது. தாய்வழி சீர்முறைகளைக் கேட்டுப்பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி உற்பத்தியை அதிகரிப்பர்.

மாணவர்கள்: மாணவர்கள் ஒருமுகத்தன்மையோடு படித்தால் மட்டுமே எதிர்பார்த்த தரத்தேர்ச்சி கிடைக்கும். படிப்புக்கான பணவசதி பெறுவதில் சிரமம் இருக்காது. சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. சக மாணவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரியால் உண்டாகும் தொல்லைகளை தகுந்த எதிர்நடவடிக்கையால் சரிசெய்வீர்கள். அரசியல் பணிக்கு புத்திரர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர். வெளியூர் பயணத்தின் மூலம் நல்ல அனுபவமும் புதியவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து தாராள பணவரவைப் பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் வருட முற்பகுதியில் நல்ல தீர்வு கிடைக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்
 
ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) -செலவில் கண் வையுங்க! 60/100

சாதுர்யமாகச் செயல்பட்டு சாதனை படைக்கும் ரிஷபராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனிபகவான் மட்டுமே புரட்டாசி முதல் பங்குனி வரை (செப்டம்பர்- மார்ச்) நற்பலன்களை அள்ளி வழங்கும் வகையில் செயல்படுகிறார். ஆனால், மற்ற கிரகங்களான குரு, கேது, ராகுவின் அமர்வால் சங்கடமான அனுபவத்தைப் பெறுவீர்கள். எந்த விஷயத்தையும் குழப்பமான மனதுடன் அணுகுவீர்கள். புத்திரர் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் வரை மந்தகதியிலும் பின் சுறுசுறுப்பான வகையிலும் செயல்படுவர். பூர்வ சொத்தின் மூலம் ஆண்டின் தொடக்கத்தில் குறைவான வருமானமும் புரட்டாசி (செப்டம்பர்) முதல் ராகு கேது பெயர்ச்சியால் அதிக வருமானமும் கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். எதிரிகளின் மறைமுகத் தொல்லைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முயற்சிப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவுப்பழக்கம், தகுந்த ஓய்வுமுறையைப் பின்பற்றுவது நல்லது. விலைமதிப்பு மிக்க பொருட்களை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். குடும்பச் செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கும். சிக்கனம் மிக அவசியம். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி நட்பு மலரும். தொழில் சார்ந்த வகையில் குறுக்கிடும் சிரமங்களைச் சரிசெய்வதில் அக்கறை தேவைப்படும்.

தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் பல்வேறு குறுக்கீடுகளை எதிர்கொள்வர். முறையான மாற்றுத்திட்டங்களை செயல்படுத்துவதால் மட்டுமே வளர்ச்சி சீராகும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். சக தொழில் சார்ந்த எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. தொழில் கூட்டமைப்பில் கிடைக்கிற பதவி, பொறுப்பால் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

வியாபாரிகள்: வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை எதிர்கொள்வர். லாபவிகிதம் சுமாராக இருக்கும். சலுகைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வியாபாரத்தைத் தக்கவைப்பர். கூடுமானவரை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. விரிவாக்க முயற்சி இப்போதைக்கு கூடாது.

பணியாளர்கள்: பணியாளர்கள் தயக்க மனதுடன் சுதந்திரம் இல்லாமல் பணியாற்றுவர். பணி இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரலாம். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் பொறுமை காக்க வேண்டியதிருக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவால் சிரமத்திற்கு ஆளாவர். சிலருக்கு விரும்பாத பணியிடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இடங்களில் குளறுபடியான சூழ்நிலையை எதிர்கொள்வர். பணி நிறைவேற்றுவதில் கவனம் கொள்வதால் மட்டுமே பணி இலக்கு குறித்தகாலத்தில் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். ஆடம்பர பணச்செலவு குறைப்பதால் கடன் நெருக்கடி குறையும். வரவுக்கேற்ப செலவைத் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. இரவல் நகை கொடுக்க, வாங்கக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே வளர்ச்சி சீராக இருக்கும். பாக்கி வசூலிக்க கடின முயற்சி தேவைப்படும்.

மாணவர்கள்: படிப்பில் இருந்து வரும் கவனக்குறைவை மாணவர்கள் சரிசெய்து கொள்வது நல்லது. படிப்புக்கான செலவை மட்டும் பெற்றோரிடம் எதிர்பார்க்க வேண்டும். ஆடம்பரச்செலவு கூடாது. இரவல் வாங்கிய பொருள் காணாமல் போக வாய்ப்பு உள்ளது. அலைச்சல், வெளியூர் பயணம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள்: சமூகப்பணி செய்வதில் ஆர்வம் குறையும். ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பணம் தேவைப்படும். அரசு அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேற்ற கடின முயற்சி தேவைப்படும். பொறுமையைக் கடைபிடித்தால் மட்டுமே கடந்த கால நற்பெயரை தக்கவைக்க முடியும். எதிரியால் வருகிற தொல்லை வருட பிற்பகுதியில் சரியாகும்.

விவசாயிகள்: விடாமுயற்சியுடன் உழைத்து மகசூலைப் பெருக்க முயற்சிப்பர். செலவு அதிகரித்தாலும் விலைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் போகலாம் கவனம். கால்நடைவளர்ப்பினால் கிடைக்கிற வருமானம் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்யும். நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் வருட பிற்பகுதியில் சரியாகும்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தேவைக்கானவருமானம் கிடைக்கும்.

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - வீட்டில் விசேஷங்க 65/100

வாழ்வில் திட்டமிட்டுச் செயலாற்றும் மிதுனராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் ராகு, கார்த்திகை மாதம் வரையிலும் கேது கார்த்திகை முதல் பங்குனி வரையிலும்(டிசம்பர்-மார்ச்) அளப்பரிய நற்பலன்களை சிறப்பாக வழங்குவர். குரு, சனிபகவானின் அமர்வு உங்கள் வாழ்வில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். மனஉறுதி, புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவதால் சிரமங்களை பெருமளவில் சரிசெய்யலாம். இடம், பொருள் அறிந்து பேசுவதால் நற்பெயரும் புகழும் தொடர்ந்திடும். சமூகப்பணியில் இருந்த ஆர்வம் குறையும். வீட்டில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் விபத்து அணுகாத நல்வாழ்வு பெறுவீர்கள். புத்திரர் பிடிவாத குணங்களுடன் செயல்படுகிற கிரக சூழ்நிலை உள்ளது. எதிரியினால் வரும் தொல்லையிலிருந்து விடுதலை காண்பீர்கள். நிலுவைக் கடன் ஓரளவு அடைபடும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி வீட்டில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தாராள பணச்செலவில் வாங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து குடும்பஒற்றுமையை நிலைநாட்டுவர்.குடும்பத்தில் குதூகலமும், நிம்மதியும் நிலைத்திருக்கும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். மூத்த சகோதரர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுத்துவீர்கள்.

தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் விறுவிறுப்பாகச் செயல்பட்டு நல்ல வளர்ச்சி காண்பர். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு லாபத்தை உயர்த்துவர். விரிவாக்க முயற்சி, உபதொழில் தொடங்குதல் போன்றவற்றில் வெற்றி காண்பர்.

வியாபாரிகள்: வியாபாரிகள் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பர். முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் லாபம் உயரும். வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வர நேரிடும். பழைய கடன் ஓரளவு அடைபடும். சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் உத்வேகமுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளிடம் நற்பெயர் காண்பர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி இலக்கை நிறைவேற்றுவர். கடந்த காலத்தில் இருந்த அவப்பெயர் விலகி நன்மதிப்பு உண்டாகும். புதிய பதவி, பொறுப்பு அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணம் தாராளமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் ஆலோசனையால் புதிய சந்தை வாய்ப்பு கிடைக்கப்பெறுவர்.

மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் ஞாபகத்திறன் வளர்ச்சி பெற்று கல்வியில் வளர்ச்சி காண்பர். கல்விச் செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். வீண்செலவைக் குறைத்துக் கொள்வது அவசியம். நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுமுயற்சியில் ஈடுபடுவர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகள்: சித்திரை முதல் கார்த்திகை மாதம் வரை (ஏப்ரல்-டிசம்பர்) உங்களின் அரசியல்பணியால் சமூகத்தில் நல்ல வரவேற்பைக் காண்பீர்கள். ஆதரவாளர்களின் ஆதரவைக் கண்டு புதிய உத்வேகம் உண்டாகும். எதிரிகள் பலமிழந்து விலகிச் செல்வர். எதிர்பார்த்த பதவி, புதிய பொறுப்பு அதிர்ஷ்டகரமான வகையில் கிடைக்கும். புத்திரர்கள் அரசியல் பணிக்கு ஓரளவு துணை நிற்பர்.

விவசாயிகள்: விவசாயப் பணிகள் சீராக நிறைவேறும். விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று லாபம் காண்பர். கால்நடைமூலம் கிடைக்கும் ஆதாயம் குடும்பச் செலவிற்கு உதவும். நவீன உழவுக்கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். நிலம் தொடர்பான பிரச்னைகளில் சமரச போக்கை கையாளுவது நல்லது.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழில் முன்னேற்றமும், நல்ல லாபமும் உண்டாகும்.

No comments:

Post a Comment