Friday, April 20, 2012

Maha Periyava Experiences


ராமநாதா நீ பாக்யசாலிடா!"
    

    [திரு ரமணி அண்ணா எழுதிய புத்தகத்தில் இருந்து      
      வரகூரான் நாராயணனால் தமிழில் டைப் அடிக்கப்பட்டது]
     Courtesy: T.Nagar - PB Padmanabhan

    பல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்ட    
      ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில்    
      வசித்து வந்தார். அவர் மனைவி தர்மாம்பாள்;ஒரே மகள் காமாட்சி.
  
    அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தை    
      வயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லை. உபன்யாசம்    
      பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாகப் பார்த்து    
      அளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்
         பெற்றுக்கொள்வார். ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்
         மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.
       
      இருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்
         நிச்சயமானது. ஒரு மாதத்தில் திருமணம். மணமகன்
         ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.    

    தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள்,"பொண்ணுக்குக்
         கல்யாணம் நிச்சியமாயிடுத்து, கையிலே எவ்வளவு
         சேர்த்து  வெச்சிண்டிருக்கேள்?" கனபாடிகள் பவ்யமாக,
         "தாமு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும்
         அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்
         சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே"
         என்று சொல்ல, தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது.
  
     "அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்?
         நகைநட்டு, சீர்செனத்தி,பொடவை, துணிமணி வாங்கி,சாப்பாடு
         போட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும்
      பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடு
         பண்ணுங்கோ!"  இது தர்மாம்பாள்.
       இடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.
      உடனே தர்மாம்பாள், "ஒரு வழி இருக்கு, சொல்றேன், கேளுங்கோ,
         கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ, கொஞ்சம்
         பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ, அங்கே

   

    ஸ்ரீமடத்துக்குப் போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சு,கல்யாணப்
         பத்திரிகையையும் வெச்சு மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி
         விஷயத்தைச் சொல்லுங்கோ. பதினைந்தாயிரம் பண ஒத்தாசை
         கேளுங்கோ...ஒங்களுக்கு 'இல்லே'னு சொல்லமாட்டா பெரியவா"
         என்றாள் நம்பிக்கையுடன்.

      அவ்வளவுதான்...ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம்
         வந்துவிட்டது.  "என்ன சொன்னே..என்ன சொன்னே நீ!
         பெரியவாளைப் பார்த்துப் பணம் கேக்கறதாவது...என்ன வார்த்த
         பேசறே நீ" என்று கனபாடி முடிப்பதற்குள்.....
      

    "ஏன்? என்ன தப்பு? பெரியவா நமக்கெல்லாம் குருதானே? குருவிடம்
         யாசகம் கேட்டால் என்ன தப்பு?" என்று கேட்டாள் தர்மாம்பாள்.
      "என்ன பேசறே தாமு? அவர் ஜகத்குரு. குருவிடம் நாம "ஞான"த்தைத்தான்
         யாசிக்கலாமே தவிர, "தான"த்தை [பணத்தை] யாசிக்கப்படாது"
         என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள்.  பயனில்லை. அடுத்த நாள்
         "மடிசஞ்சி"யில் [ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளி்ப் பை]

      தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டார்
         கனபாடிகள்.
     ஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்.
      ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்று
         கொண்டிருந்தார் ராமாநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின்
         கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.
     பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும்
         அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக
         வாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவி்ட்டார்..
         இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், "ஐயா...ஐயா...அந்த
         தட்டிலே க்ல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன். பெரியவாளிடம்
         சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும். அதை இப்படி எடுங்கோ" என்று
         சொல்லிப் பார்த்தார். யார் காதிலும் விழவில்லை.
      அதற்குள் மகா ஸ்வாமிகள்,கனபாடிகளைப் பார்த்துவிட்டார்.
         ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், "அடடே! நம்ம கரூர் ராமநாத
         கனபாடிகளா? வரணும்..வரணும். ஸ்ரீரங்கத்தில் எல்லோரும்
         க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?"
         என்று விசாரித்துக் கொண்டே போனார்.
     "எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறது"
         என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்
         பண்ணி எழுந்தார். உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே,
         "ஆத்திலே...பேரு என்ன...ம்..தர்மாம்பாள்தானே? சௌக்யமா?
         ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள். அவரோட
         அப்பா சுப்ரமண்ய கனபாடிகள். என்ன நான் சொல்ற பேரெல்லாம்
         சரிதானே?" என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்
         "சரிதான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தாமுதான்
         பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா.."என்று குழறினார்.
      "அப்போ, நீயா வரல்லே?"; இது பெரியவா.
       
     "அப்படி இல்லே பெர்யவா. பொண்ணுக்குக் கல்யாணம்
         வெச்சுருக்கு, தாமுதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு
         பத்திரிகையை சமர்ப்பிச்சு.." என்று கனபாடிகள் முடிப்பதற்குள்
         "ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பா" என்று பூர்த்தி
         பண்ணிவிட்டார் ஸ்வாமிகள்.
     பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று
         புரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா,
      "உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன். நடத்திக்
        கொடுப்பியா?" என்று கேட்டார்.
     "அஸைன்மெண்டுன்னா  பெரியவா?"  இது கனபாடிகள்.
      "செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம்.
        எனக்காகப் பண்ணுவியா?"
      பெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன், வந்த விஷயத்தை
        விட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு,
      "சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்"என்றார்.
      உடனே பெரியவா, "ஒனக்கு வேற  என்ன அஸைன்மெண்ட்
        கொடுக்கப் போறேன்? உபன்யாசம் பண்றதுதான். திருநெல்வேலி
         கடையநல்லூர் பக்கத்துல ஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமான
         நிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாம
         செத்துப் போய்டறதாம். கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுல
         பெருமாள் கோயில்ல "பாகவத உபன்யாசம்" பண்ணச் சொன்னாளாம்.

     ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்
         இங்கே வந்தார். விஷயத்தைச் சொல்லிட்டு,"நீங்கதான் ஸ்வாமி
         "பாகவத உபன்யாசம்" பண்ண ஒருத்தரை அனுப்பி உதவி
         பண்ணணும்"னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார்.
      நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி்ட்டு வரணும்.
         விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும் கேட்டுக்கோ
         சிலவுக்கு மடத்துல பணம் வாங்கி்க்கோ. இன்னிக்கு ராத்திரியே
         விழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவனை [வெகுமானம்] அவா
         பார்த்துப் பண்ணுவா.  போ..போ...போய் சாப்டுட்டு ரெஸ்ட்
         எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம்
         பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்வாமிகள்.
      அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள்
         மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில்
        பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அைழைத்துச் சென்றார்.
     ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள்
         கோயில்.  கோயில். பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார்.
        கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காகூட
         கனபாடிகளை வந்து பார்க்கவிலை. "உபன்யாசத்தின்போது எலோரும்  
      வருவா" என அவரே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார்.
  
    மாலை வேளை, வரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்து
         ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தைக் காஞ்சி ஆச்சார்யாளை
         நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே
      எதிரே ஸ்ரீவரதராஜப் பெருமாள், கோயில் பட்டர்,
         கோயில் மெய்க்காவல்காரர். இவ்வளவு பேர்தான்.
      உபன்யாசம் முடிந்ததும், "ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே
         வரல்லே?" என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார்
         கனபாடிகள்.
     அதற்கு பட்டர்,"ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டுபட்டுக்
         கிடக்கு! இந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவது
         என்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை, அதை
         முடிவு கட்டிண்டுதான் "கோயிலுக்குள்ளே நுழைவோம்"னு
         சொல்லிட்டா. உப்ன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துல
         ஊர் இ்ப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன்" என்று

   

    கனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினார்.
        பட்டரும், மெய்க்காவலரும்,பெருமாளும் மாத்திரம் கேட்க
        ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார்,
         ராமநாத கனபாடிகள். பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனை
          பண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை
         வைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம்
         சில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார். பட்டர்
         ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக்

   

    கனபாடிகளிடம் அளித்து , "ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படி
         ஆயிடுத்து. மன்னிக்கணும்.ரொம்ப நன்னா ஏழு நாளும் கதை
         சொன்னேள். எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனை
         பண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயிலேத்தி
         விட்டுடறேன்" என கண்களில் நீர் மல்க உருகினார்!.

      திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும் மெய்க்காவலரும் வந்து
         வழியனுப்பினர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம்
         வந்து சேர்ந்தார் கனபாடிகள்.

     அன்றும் மடத்தில் ஆச்சார்யாளைத் தரிசிக்க ஏகக் கூட்டம்.
        அனைவரும் நகரும்வரை காத்திருந்தார் கனபாடிகள்.
     "வா ராமநாதா! உபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயா?
         பேஷ்...பேஷ்!  உபன்யாசத்துக்கு நல்ல கூட்டமோ?

       சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?" என்று உற்சாகமாகக்
         கேட்டார் ஸ்வாமிகள்.
      கனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில்
         பெரியவாளிடம்,  "இல்லே பெரியவா, அப்படி எல்லாம்
         கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளே
         ஏதோ பிரச்னையாம் பெரியவா, அதனாலே கோயில் பக்கம்
         ஏழு நாளும் யாருமே வல்லே"என்று ஆதங்கப்பட்டார்
         கனபாடிகள்.

      "சரி...பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?"
     "ரெண்டே..ரெண்டு பேர்தான் பெரியவா.அதுதான் ரொம்ப
         வருத்தமா இருக்கு" இது கனபாடிகள்.
      உடனே பெரியவா, "இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்த
         ரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்" என்றார்.
  
    "வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா. ஒண்ணு, அந்தக்
         கோயில் பட்டர். இன்னொண்ணு கோயில் மெய்க்காவலர்"
         என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்வாமிகள் இடி இடியென்று
         வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
      "ராமநாதா... நீ பெரிய பாக்யசாலிடா! தேர்ல  ஒக்காந்து
      கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன்
        ஒருத்தன்தான் கேட்டான். ஒனக்கு பாரு.ரெண்டு பேர்வழிகள்
         கேட்டிருக்கா. கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி"
         என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும்
         சிரிப்பு வந்துவிட்டது.

      "அப்படின்னா பெரிய சம்பாவனை கெடச்சிருக்க வாய்ப்பில்லை
         என்ன?" என்றார் பெரியவா.
      "அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவல்காரர்
         ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவா
         கெடச்சுது பெரியவா!" ;கனபாடிகள் தெரிவித்தார்.
      "ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டு வந்தே.
         உன்னோட வேதப் புலமைக்கு நெறயப் பண்ணனும்.இந்தச்
         சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு" என்று கூறி, காரியஸ்தரைக்
         கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளு்க்குச் சால்வை
         போர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார்.

     

     "இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு. நீயும் ஒ்ன் குடும்பமும்
         பரம சௌக்கியமா இருப்பேள்" என்று உத்தரவும் கொடுத்தார்
         ஸ்வாமிகள்.

     கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த
         கனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப் பார்க்க எதற்காக
         வந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்கு
      வந்தது."பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை...பெண் கல்யாணம்
     நன்னா நடக்கணும். "அதுக்கு...அதுக்கு..." என்று அவர்
        தயங்கவும்,

       "என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாகத்தை
        சந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார்.
        ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா." என்று விடை
         கொடுத்தார் ஆச்சார்யாள்.

      ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டு
        வாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படி
        இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார்
         ராமநாத கனபாடிகள்.
      "இருங்கோ..இருங்கோ...வந்துட்டேன்..."
         உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல்..
     வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர்
         கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள்.
        காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு,"இங்கே பூஜை
        ரூமுக்கு வந்து பாருங்கோ"  என்று கனபாடிகளை அழைத்துப்
         போனாள்,
     பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள்.அங்கே ஸ்வாமிக்கு
         முன் ஒரு பெரிய மூங்கில் தட்டில்,பழ வகைகளுடன் புடவை,
        வேஷ்டிஇரண்டு திருமாங்கல்யம்,மஞ்சள்,குங்குமம்,புஷ்பம்
         இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.
      "தாமு..இதெல்லாம்..." என்று அவர் முடிப்பதற்குள்,,
         "காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதா
         இன்னிக்குக் காத்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்து
     வெச்சுட்டுப் போறா. "எதுக்கு?"னு கேட்டேன். "ஒங்காத்து பொண்
         கல்யாணத்துக்காகத்தான் பெரியவா  சேர்ப்பிச்சுட்டு வரச்
        சொன்னா"னு சொன்னா" என்று முடித்தாள் அவர் மனைவி.
     கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. "தாமு,
         பெரியவாளோட கருணையே கருணை. நான் வாயத் திறந்து
         ஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம்
         இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு" என்று நா தழுதழுத்தவர்
     "கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ" என்று
         கேட்டார். "நான் எண்ணிப் பார்க்கலே" என்றாள் அவர் மனைவி.
           கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.
         பதினைந்தாயிரம் ரூபாய்!
     

      

No comments:

Post a Comment